அடுத்த ஆண்டு பொறியியல் படிப்புக்கு நுழைவுத் தேர்வு உயர்கல்வித் துறை அமைச்சர் சூசகம் | அடுத்த கல்வியாண்டில் பொறியியல் படிப்புக்கு நுழைவுத் தேர்வு நடக்காது என்பதற்கு உத்திரவாதம் அளிக்க முடியாது என உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தெரிவித்தார். சென்னை லயோலா ஐகேம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 3-வது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில், அமைச்சர் கே.பி.அன்பழகன் 360 மாணவ-மாணவிகளுக்கு பட்டங் களை வழங்கினார். மேலும், சிறப் பிடம் பெற்ற 11 பேருக்கு பதக்கங்களையும் அவர் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாணவர் களிடையே அமைச்சர் பேசியது: அறிவுத் தேடலில் மாணவர்களுக்கு எப்போதும் ஆர்வம் இருக்க வேண்டும். வாழ்க்கையில் வெற்றிபெற முயற்சி மற்றும் பயிற்சி மிக முக்கியம். வாழ்வில் மேலும் சிறப்படைய பட்டங்கள் உதவும். அதேவேளையில், வாழ்வை தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ள வேண்டும். அதற்காகத்தான் கல்வி பயில்வது. கல்லூரியை விட்டு வெளியில் சென்றாலும், தொடர்ந்து திறமை களை வெளிப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். அடிப்படை பண்பு நலன்களை எப்போதும் கடைப்பிடிக்க வேண்டும். இவ்வாறு அமைச்சர் பேசினார். பட்டமளிப்பு விழாவில் கல்லூரி பேராசிரியர்கள், பெற்றோர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பட்டமளிப்பு விழா நிறைவடைந்து வெளியில் வந்த அமைச்சர் கே.பி.அன்பழகனிடம் நீட் தேர்வு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, "நீட் தேர்வு குறித்து அமைச்சர்கள் மிகத் தெளிவாக ஏற்கனவே தெரிவித்துள்ளனர்" என்றார். தொடர்ந்து, அடுத்த ஆண்டு பொறியியல் படிப்புக்கும் நுழைவுத் தேர்வு வருவதாக கூறப்படுவது குறித்து செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு பதில் அளித்த அமைச்சர், காலப்போக்குக்கு தகுந்தாற்போல அனைத்தும் மாறி வருகிறது. 2018-19-ம் ஆண்டுக்கான பொறியியல் சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு வருகிறது என சொல்கிறார்கள். நாங்கள் அதை வேண்டாம் என சொல்லியுள்ளோம். முதுநிலை பொறியியல் படிப்புக்கு மத்திய அரசு 'கேட்' தேர்வு நடத்துகிறது. நாம் 'டான்செட்' தேர்வு மூலம் மாணவர் சேர்க்கையை நடத்துகிறோம். அனைத்து மாநிலங்களும் நுழைவுத் தேர்வை ஏற்றுக் கொள்ளும்போது அதில் இருந்து நாம் விலக்கு கோர முடியாது. நீட் தேர்வு வேண்டாம் எனவும் வலியுறுத்தியுள்ளோம். அதேபோல, பொறியியல் நுழைவுத் தேர்வு குறித்தும் கோரிக்கை வைத்துள்ளோம். அது குறித்து பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். சென்னை லயோலா ஐகேம் பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரி பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. இதில், மாணவ, மாணவிகளுக்கு தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் பட்டங்களை வழங்கினார். உடன் கல்லூரியின் ரெக்டார் பிரான்சிஸ் ஜெயபதி, இயக்குநர் இக்னாசி ஆரோக்யா, முதல்வர் ஜோஸ் சுவாமிநாதன் உள்ளிட்டோர்.
No comments:
Post a Comment